மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் முழு ஊரடங்கைக் கடைபிடித்தபோதிலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 33 விழுக்காடு அலுவலர்கள், ஆசிரியர்கள் மூலமாக பல்கலைக்கழகப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த தொலைதூரக் கல்வி அலுவலர் ஒருவருக்கு நேற்று (ஜூலை 17) கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை20 ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு முழு விடுமுறை என்ற அறிவிப்பினை பதிவாளர் வசந்தா (பொறுப்பு) சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முதல்முறையாக கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விடுமுறை அளித்துள்ளது.