தீபாவளி பண்டிகயை முன்னிட்டு சார்ஜாவில் இருந்து கடத்தல் கும்பல் மூலம் கோவைக்கு தங்கம், ஐபோன்கள், டிரோன்கள், சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வருவாய் புலனாய்வு துணை இயக்குனர் சதீஸ் தலைமையிலான அலுவலர்கள் கோவை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த, 14ஆம் தேதி அதிகாலை சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் கோவை வந்தது. அதில் பயணம் செய்த கேரள மாநிலம் காசர்கோடு, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 15 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது, பசை வடிவில் தங்கம் மாற்றி உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3.26 கோடி மதிப்பிலான ஆறு கிலோ தங்கம், ஒரு கிலோ தங்கச் செயின், 1.03 கோடி மதிப்பிலான ஆறு லட்சம் சிகரெட்டுகள், 53 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள், ட்ரோன்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட, 15 பயணிகள் அனைவரும், 25 – 35 வயதுக்குள்பட்டவர்கள் என்றும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.