நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பொதுமக்களிடமிருந்து நீட் தேர்வு கருத்துக்களை் பெற்று வருகிறது. இந்தக் குழுவிற்கு கருத்துக்களை தெரிவிக்க இன்று (ஜுன்.23) இறுதி நாளாகும்.
இந்நிலையில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "நீட் தேர்வு இருக்கக் கூடாது என்பதுதான் மாணவர்களின் கருத்தாக உள்ளது. நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவிடம் திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் வேண்டுகோள் கடிதத்தினை அளித்துள்ளோம். குழு நல்ல முடிவினை எடுப்பார்கள்" என நம்புகிறோம்.
"கடந்த மூன்றாண்டுகளாக நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டது, தற்கொலை செய்து கொண்டது குறித்து குழுவின் தலைவரிடம் கூறினோம்.
நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்தப்படும் என தோராயமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் திமுக தேர்தல் அறிக்கை உட்பட நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் முடிவு. எனவே அதனை எதிர்த்து தான் நாங்கள் குரல் கொடுப்போம்.
நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு பாதகம் இல்லாமல் முடிவெடுக்கப்படும்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒன்றிய அரசு' எனும் சொல்லாடலைத் தான் தொடர்ந்து பயன்படுத்துவோம் - முதலமைச்சர் ஸ்டாலின்