காசிமேடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சொரிகுப்பன் (வயது 60). மீனவரான இவர் திமுக பிரமுகர். இவர் நேற்று முன்தினம் மாலை காசிமேடு கடற்கரையில் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் சொரிகுப்பன் படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை காசிமேடு காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
இந்த கொடூரக் கொலை குறித்து காசிமேடு காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அட்டு ரமேஷ் (44), சம்பத் (25), ராகேஷ்(18), சந்தோஷ் (19) ஆகியோர் சொரிகுப்பனை வெட்டி கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து காவலர்கள் அட்டு ரமேஷை கைது செய்து விசாரித்தனர். அப்போது ரமேசும் அவரது கூட்டாளிகளும் அப்பகுதியில் கஞ்சா மற்றும் மாவா, போதை மாத்திரைகள் விற்று வந்ததாகவும் அதனை சொரிகுப்பன் தட்டி கேட்டதால் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் ரமேஷின் மனைவியை சொரிகுப்பன் திருமணத்தை தாண்டிய உறவுக்கு அழைத்துள்ளார்.
இதனால் அட்டு ரமேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சொரிகுப்பனை வெட்டி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடுக்காட்டில் 6 வயது குழந்தைக்கு நிகழ்ந்த பயங்கரம்.!