சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் சுமார் 15 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு நக்சலைட்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இப்பகுதியில் சுமார் 2500 பெண் நக்சலைட்டுகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் கடுமையான சூழ்நிலைகளில் பணியாற்ற தள்ளப்படுகின்றனர். குறிப்பாக, மாதவிடாய் காலம் அவர்களுக்கு சவாலாக இருந்து வருகிறது. வனப்பகுதியில் அதிகப்படியான நேரம் செலவழிக்கும் பெண் நக்சலைட்டுகளுக்கு உடல் ரீதியான பிரச்னைகளை எதிர்க்கொள்கின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு, சத்தீஸ்கரில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்பு, நக்சல்கள் மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை ஏற்படுத்த புதிய வழி ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி, கடுமையான சூழ்நிலையில் பணியாற்றும் பெண்களுக்கு இந்தாண்டின் தீபாவளி பரிசாக இலவச நாப்கின்கள் மற்றும் மாதவிடாய் கோப்பைகள் வழங்கவுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சுப்ரன்ஷு சவுத்ரி கூறுகையில், " இங்கு உள்ள பெண்களுக்கு மாதவிடாய் குறித்து சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அமைதியை நிலைநாட்ட முடியும் என நம்புகிறேன். நக்சலைட் பிரச்னையால் பாதிக்கப்பட்ட லத்தீன் மற்றும் கொலம்பியாவிலும் இதேபோன்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கொரில்லா போராளிகளுக்கு பரிசுகள் அனுப்பப்பட்டன. அதன் முடிவு, அவர்கள் அமைதியின் திசையில் திரும்பியது தெரியவந்தது" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், " மாதவிடாய் கோப்பையின் விலை சுமார் 700 ரூபாய் ஆகும். சானிட்டரி பேட்களின் பாக்கெட்டுகளைச் சேர்த்து கணக்கிட்டால் ஒரு பெண் நக்சலைட்டுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் செலவிடப்பட உள்ளது. குறைந்தது 2500 பரிசுகளின் தொகுப்பை தயாரிப்பதே எங்களின் குறிக்கோள். இதற்காக, ஆன்லைனில் நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம். இது தவிர, பெண்கள் பிரச்னைகள் மற்றும் கிராமப்புற சுகாதாரம் குறித்து செயல்படும் சில அமைப்புகளும் உதவி செய்ய முன்வந்துள்ளன" என்றார்.