டெல்லி : ஏறத்தாழ 16 மாதங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் குற்ற வழக்கு ஒன்று நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், நீதிபதி அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்குரைஞர் நேரடியாக ஆஜராகி வாதாட விருப்பம் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். எனினும் காணொலி வாயிலாக ஆஜராகலாம் என்ற சலுகையையும் அவர்கள் மறுக்கவில்லை.
கரோனா பரவலுக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக மெய்நிகர் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிலுந்து உச்சநீதிமன்ற செயலி மூலம் ஊடகவியலாளர்களுக்கும் விசாரணையை அணுக நீதிமன்றம் ஏற்பாடு செய்தது.
முன்னதாக, நீதிமன்றத்தை மீண்டும் திறப்பது குறித்து பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முன்னாள் தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே கூட, கொடிய தொற்றுநோய் பரவுவதால் மருத்துவ வல்லுநர்கள் நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்று கூறியிருந்தார்.
கோவிட் பரவல், பொதுமுடக்கம் காரணமாக வழக்குரைஞர்கள் நிதி ரீதியாக சிரமப்பட்டனர், ஏனெனில் அவர்களின் வருவாய் அவர்கள் கையாளும் வழக்குகளை அடிப்படையாகக் கொண்டது. நெருக்கடியைத் தொடர்ந்து, பார் கவுன்சில் அத்தகைய வழக்குரைஞர்களுக்கு உதவ திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. எனினும் வழக்குரைஞர்கள் திருப்தியடையவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை நடைபெற்றிருப்பது வழக்குரைஞர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க : தன்பாத் நீதிபதி கொலை- உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!