பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பாதுகாப்புப்படை துல்லியத் தாக்குதலை 2016 ஆம் ஆண்டு நடத்தியது. இதனையடுத்து, சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலையும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்-2 என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்களை பாஜக பெருமையாக கூறிக் கொண்டுவருகிறது. குறிப்பாக வட மாநில தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி இதனை சுட்டிக்காட்டி பேசி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் துல்லியத் தாக்குதல் நடந்துள்ளதாக முன்னாள் லெப்டினண்ட் ஜெனரல் ஹூடா கூறியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், " கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் துல்லியத் தாக்குதல் நடந்துள்ளது. எப்போது, எங்கு நடைபெற்றது என்பது குறித்து எனக்கு நினைவில் இல்லை" எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ், " 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதிதான் முதல் முறையாக துல்லியத் தாக்குதல் நடைபெற்றது. இதற்கு முன் நடைபெற்றதாக எந்த ஒரு ஆவணமும் இல்லை" என திட்டவட்டமாக மறுத்தார்.
இத்தகைய சூழலில், துல்லியத் தாக்குதல், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதல் ஆகியவற்றை மையமாக வைத்து பாஜக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவருகின்றனர்.