இந்திய மேலாண்மையின் 10ஆவது மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் இந்திய ஜனாதிபதி, நான் ஜனாதிபதியாக இருந்த முதல் ஆண்டில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றேன். அப்போது அதன் இயக்குநரிடம், அடிப்படை கல்வி, ஆராய்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த மாணவர்கள் யாரேனும் உள்ளனரா எனக் கேட்டேன். அதற்கு அவர் உறுதியாக பதில் கூறவில்லை.
இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் அடிப்படை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்றவர் யாரும் இல்லை. இது திறமை இல்லாதது பற்றிய கேள்வி அல்ல. அதற்கான சூழலை உருவாக்க ஆசிரியர்கள் தவறிவிட்டோம். மேலும் அடிப்படை ஆராய்ச்சிக்காக மாணவர்களை ஊக்குவிக்க தவறிவிட்டோம். ஐஐடியில் பயிலும் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதைவிட, அவர்களின் திறமையும் சேவையும் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது.
நாலாந்தா, விக்ரமஷிலா போன்ற பல்கலைகழகங்கள் மட்டும் இருக்கும்போது இந்தியா உயர்கல்வியில் பல சாதனைகளைப் படைத்தது. ஆனால் தற்போது ஆயிரத்திற்கும் மேலான பல்கலைகழகங்கள், 36 ஆயிரத்திற்கும் மேலான கல்லூரிகள் என பல இருந்தும் மாணவர்கள் அடிப்படைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்காமல் விட்டுவிட்டோம்.
வஷிஸ்தா நாராயிண் சிங் போன்ற கணக்கு மேதைகள் சிறந்த ஆசிரியர்களால் தான் உருவாக்கப்பட்டார்கள். அதுபோல் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் துணை நிற்க வேண்டும். உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் பின்பற்றும் முறையை இந்திய பல்கலைகழகங்கள் பின்பற்றாதது தான் உலகின் தலைசிறந்த 200 பல்கலைகழகங்களில் இடம்பெறாததற்கான காரணம்.
இந்தியா கூடிய விரைவில் உலகளாவிய கிராமமமாக மாறவுள்ளது. அதில் வசிக்கும் நாம், நமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய முறைகளையும் கண்டறிய வேண்டும். எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, அதே பொருளாதாரத்தில் பின் தங்கிருப்பதை விரும்பவில்லை என்றார்.