புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை புதுச்சேரியில் அலுவலர்கள் திட்டமிட்டு காலதாமதப்படுத்துகின்றனர். பொதுவாக அரிசி, பருப்பு போன்ற பொருள்களை இரண்டு அல்லது மூன்று நாள்களில் மக்களிடம் அலுவலர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். மீதமுள்ள மக்களுக்கு எப்போது அரிசி கிடைக்கும் என்ற காலவரையறை கூட இல்லாமல் இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த உணவுப் பொருள்களை நான்கு நாள்களில் கொடுத்துவிடுவோம் என்று சொன்னவர்கள், தற்போது பத்து நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு ஏழை மக்களுக்கு கொடுத்துள்ள உணவுப் பொருள்ளை கொடுக்கத் தயக்கம் காட்டும் அட்மினிஸ்ட்ரேட்டரும், அதற்கு உறுதுணையாக இருக்கும் தலைமைச் செயலரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூற விரும்புகிறேன்.
மக்களுக்கு கரோனா நோய்த் தொற்று நிவாரணத் தொகையாக 2,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தியதில், அலுவலர்கள் முறைகேடு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க... நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை நிறுத்தக்கூடாது - புதுச்சேரி எம்.பி. வேண்டுகோள்