நீலகிரி: கூடலூர் அருகே உள்ள மசினகுடி பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் நடராஜன். இவரை, நேற்று பொக்காபுரம் கோயிலுக்குச் சென்று திரும்பி வரும் வழியில் காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, நடராஜனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையிலும் ஒருவர் பலி: கோவை அட்டுக்கல் கிராமத்தில் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (30) என்பவர், இன்று அதிகாலை காலைக்கடன் கழிப்பதற்காக தனது வீட்டிற்கு அருகே அமைந்துள்ள வனப்பகுதி அருகில் சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ரவி பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.