திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை சிறுத்தை கடித்துக் குதறிய நிலையில், 8 ஆடுகள் குடல் சரிந்து உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர், உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவர் கோகிலாசன் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டார். மேலும், காயமடைந்த ஆடுகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனிடையே, சிறுத்தையின் அட்டகாசம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ஆடுகளை கொன்றதாகக் கூறப்படும் சிறுத்தையைக் கண்காணிக்க சம்பவம் நடந்த இடத்தில் வாணியம்பாடி வனத்துறையினர் 3 கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்கும் படியும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.