வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி பகுதியில் சிலர் கள்ளத்தனமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, கர்நாடகா பதிவு எண் கொண்ட டாடா ஏஸி வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் 1,200 கிலோ ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்தப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தி வந்த பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் (38), முகமது இஸ்மாயில் (32) ஆகிய இரண்டு பேரை கைது செய்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.