சென்னை: ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர், கடந்த ஏழு வருடங்களாக மனோஜ் என்பவரின் பண்ணை வீட்டில் குடும்பத்தோடு தங்கி கார் ஓட்டுநராகவும், காவலாளியாகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு சுகுமாரனின் இரண்டாவது மகன் ரிதீஷை (3) நீண்ட நேரமாக காணவில்லை.
தேடிப் பார்த்ததில், குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை மீட்டு ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சுகுமாரன் கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்ததாக கூறியதையடுத்து, சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கேயும் மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தை உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உடனடியாக சிறுவனுக்கு மருத்துவம் பார்க்காததால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.