திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1,400 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் உள்ள 8 வகுப்பறைகளை 'ஸ்மார்ட் கிளாஸ்' ஆக அறிவுத்திருக்கோவில் அக்ஷயா டிரஸ்ட் என்னும் தன்னார்வலர்கள் உதவியுடன் மாற்றியுள்ளனர். இதனால் தற்போது பள்ளி கட்டடம் முழுக்க வர்ணம் பூசப்பட்டு, ஆங்காங்கே தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வாசகங்கள் பளிச்சிடுகின்றன.
மேலும் இந்த நீலம், மஞ்சள், ஊதா நிற வகுப்பறைக்குள் அந்தந்த நிறத்திற்கேற்ப மாணவர் அமரும் இருக்கை, மேஜை, கதவு, ஜன்னல்களில் மாட்டப்பட்டுள்ள திரை சீலை, மின்விசிறி, புத்தகங்கள் வைக்கும் அலமாரி என அனைத்தும் அதே நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதுடன், அதே நிறத்தில் வகுப்பு சார்ந்த பாடப்பகுதிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
அதிலும் இந்த வகுப்பறைகளுக்கு நிறத்திற்கேற்ப இருக்கும் மலரின் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி வகுப்பறைகளில் 'மெகா சைஸ்' தொடுதிரை பொருத்தப்பட்டு, 'இன்டர்நெட்' உதவியுடன் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும், அந்த வகுப்பறைகளில் ஏசி பொருத்தப்பட்டு யுபிஎஸ்சி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் த.அபர்ணா ஸ்ரீ என்னும் மாணவி மாநில அளவில் நடைபெற்ற கவிதை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து தனது பள்ளிக்கு பெருமை சேர்த்ததோடு, தனது பள்ளியின் ஸ்மார்ட் கிளாஸ் சிறப்பு உலகறிய செய்துள்ளார். இதுகுறித்து பேசிய பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஜனார்த்தனன் கூறுகையில், “அபர்ணா கவிதை எழுதுவதில் திறன் வாய்ந்தவர், எனவே பெரும்பாலும் அனைத்து கவிதைப் போட்டிகளிளும் அவரே ஆவலுடன் பங்கேற்பார். இந்த மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் என்பது மிகப்பெரிய விஷயம், எனவே, அவருக்கு என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகள்” என்றார்.
மேலும், இதுகுறித்து பேசிய மாணவி அபர்ண ஸ்ரீ, “எனக்கு கவிதை எழுதுவது பிடிக்கும். அதில் தற்போது மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது ஆசிரியர்கள் எப்போதும் என்னை இலக்கிய மன்ற போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்வார்கள். அதுமட்டுமின்றி, எனது பள்ளியின் கட்டுமானம் அழகியல் நிறைந்தது. எனவே, எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி, நான் இந்த வெற்றி மூலம் நான் பரிசாக தமிழக அரசு சார்பில் வெளிநாடு சுற்றுலா செல்லவிருக்கிறேன், அதுவும் நான் கல்வி அமைச்சருடன் செல்வதில் பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தலைமையாசிரியர், “அபர்ணாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். அவர் தற்போது அனைவரையும் எங்கள் பள்ளியை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்த பள்ளியின் தோற்றம் மாணவர்களுக்கு பிடித்தபடி, படிப்பில் ஆர்வம் வரும்படி அமைக்கப்பட்டது. இந்த கட்டமைப்புக்கள் அனைத்தும் அக்ஷயா டிரஸ்ட் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள், பி.டி.ஏ, பள்ளி மேலாண்மைக் குழுவினர், ஊர் மக்கள் சேர்ந்து உருவாக்கியதாகும். இதில் தற்போது 65 லட்சம் ரூபாய் செலவில் 8 வகுப்பறைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மாணவர்களின் கற்கும் ஆவல் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "தொழில்நுட்ப வளர்ச்சி அழிவுக்கு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது" - சென்னை ஐஐடியில் பாலஸ்தீனம் போரை சாடிய மாணவர்!