Published : Nov 13, 2023, 8:48 PM IST
பெண் மயிலை கவர தோகை விரித்தாடிய ஆண் மயில் - வைரலாகும் வீடியோ!
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் மஞ்சளாறு அணை உள்ளது. பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ள இந்த அணைப் பகுதியைத் தொடர்ந்து மஞ்சளாற்றுப் படுகை அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் கிளிகள், கொக்கு, நீர் வாத்து, நாரை உள்ளிட்ட பலவகையான பறவையினங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், இப்பகுதியில் அதிக அளவில் மயில்களும் வசிக்கின்றன. இதனிடையே, இப்பகுதியின் அருகே உள்ள வயற்பரப்பின் ஓரம் இறை தேடி பல்வேறு பறவைகளும் வந்திருந்தன. அவைகளுக்கு நடுவே, காண்போரின் கண்களைக் கட்டிப்போடும் அளவிற்கு ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடிய ரம்மியமான காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
வயல் பகுதியில் இறை தேடிக் கொண்டிருந்த மயில்கள் கூட்டத்தில், பெண் மயில் ஒன்றைக் கவர்வதற்காக, ஆண் மயில் ஒன்று நீண்ட நேரம் தோகை விரித்தாடிய இந்த அழகானக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், வருகிற சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த மயிலின் நடனமும் உள்ளதாகத் தெரியவருகிறது.