Panguni Uthiram: பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு!
திண்டுக்கல்:முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 29 ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக துவங்கி, சுமார் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பங்குனி உத்திர திருவிழாவிற்கு திண்டுக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த பங்குனி உத்திர விழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் கடந்த நான்காம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. தற்போது பங்குனி உத்திர விழாவின் நிறைவு நாளான நேற்று இரவு மலை மீது நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். அந்த தங்கத்தேரில் வலம் வந்த முருகனை அரோகரா கோஷம் எழுப்பிய வண்ணம் பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.