புரட்டாசி முதல் சனிக்கிழமை.. போடிநாயக்கனூர் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
Published : Sep 23, 2023, 1:01 PM IST
தேனி: போடிநாயக்கனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில், இன்று (செப்.23) புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமை முன்னிட்டு அனைத்து வைணவ தலங்களிலும் பெருமாளுக்கு சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் ஜமீன்தாரர்களால் உருவாக்கப்பட்டு தற்போது தமிழக அரசு இந்து அறநிலையத் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் திருக்கோயிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன.
ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி, மூலவருக்கு தங்ககவசம் சாற்றப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து, பத்மாவதி தாயாருக்கும், ஆண்டாளுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும், புரட்டாசி முதல் சனி என்பதால் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.