சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்து, மழை கொட்டத் துவங்கியுள்ளது. இந்த மழைக்கு, சூடாகவும், குளிருக்கு இதமாகக் காரமாகச் சாப்பிட வேண்டும் என்றுதான் எல்லாரும் நினைப்பர். அதற்கேற்ற மாறி சூப் செய்து சாப்பிடலாம். சூப் என்றாலே நான்வெஜ் சூப் என்று நினைப்பது தவறு. அசைவ சுவையில் சைவ சூப்களும் செய்யலாம். எப்படிச் செய்வதென்று பார்க்கலாம்.
ப்ரக்கோலி காளான் சூப்:
தேவையானவை:100 கிராம் ப்ரக்கோலி, 6 பட்டன் காளான்கள், 1 ஸ்பூன் எண்ணெய்,1 ஸ்பூன் சீரகம்
செய்முறை:ப்ரஷர் குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகத்தையும், மிளகையும் சேர்க்க வேண்டும் இவை பொரிந்தவுடன் நறுக்கிய ப்ரக்கோலி மற்றும் காளான்களைச் சேர்க்க வேண்டும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான சூட்டில் இவற்றை வதக்க வேண்டும். 2 நிமிடங்களுக்குப்பிறகு, 2 டம்ளர் சுடு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைக்க வேண்டும். 2 விசில் வந்தபிறகு, குக்கரை இறக்கிவிட வேண்டும். ஆறிய பின், பிளண்டரை பயன்படுத்தி காய்கறிகளை மசிக்க வேண்டும்.இதை வடிகட்டியும் சாப்பிடலாம். அப்படியேவும் சாப்பிடலாம். சாப்பிடும் போது இதனுடன் ப்ரஷ் கிரீமையும் சேர்த்துக்கொள்ளலாம்.
காலிப்ளவர் பேபி கார்ன் சூப்:
தேவையானவை: 1 காலிப்ளவர், கால் கப் பேபி கார்ன், 1 வெள்ளை வெங்காயம், காஜுன் மசாலா (கருப்பு மிளகு, வெள்ளை மிளகு, கெய்ன் பெப்பர், வெங்காய பொடி, பூண்டு பொடி, மிளகாய்ப் பொடி) உப்பு, மிளகு தூள், 1 ஸ்பூன் வெண்ணெய்
செய்முறை:ஒரு வாணலியில் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் காலிப்ளவர் மற்றும் பேபிகார்னை சேர்த்து வதக்க வேண்டும், அதனுடன் காஜுன் மசாலா, உப்பு, மிளகு தூள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். இவை வதங்கியவுடன் ஒரு குவாட்டர் அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும். சரியாக வெந்தபின் கப்களில் பரிமாறி, சூடாகச் சாப்பிடலாம்.