விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேவுள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் கிராமத்திலுள்ள கிணற்றை பல ஆண்டுகளாக ஊர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அந்த கிணற்றின் அருகே செயல்பட்டு வரும் அரிசி ஆலையின் கழிவுகள், நெல்உமிகள் ஆகியவற்றை ஆலையின் ஊழியர்கள் கிணற்றில் கொட்டி அசுத்தப்படுத்தி வந்தனர்.
இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பலமுறை இந்தக் கிணற்றை தூர்வாரி தருமாறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இருந்தபோதிலும், அரிசி ஆலை நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமலும், செவிசாய்க்காமல் இருந்து வருவதால், பொதுமக்கள் அவர்களாகவே முன்வந்து, அவர்களின் சொந்த செலவில் கிணற்றை தூர்வாரி வருகின்றனர்.