திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்து இருக்கின்றன. வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள். அரசு தேர்வுகள் இயக்ககம் பொதுத்தேர்வு குறித்து பல்வேறு விவரங்களை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் சேர்ந்து அவற்றின் வாயிலாக இறுதிப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி 2017ஆம் ஆண்டில் 8.93 லட்சமாக இருந்த தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, 2020 ஆம் ஆண்டில் 7.79 லட்சமாகக் குறைந்திருக்கின்றது. அதாவது, ஏறத்தாழ 1.14 லட்சம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாகக் கடந்த மூன்று தேர்வுகளில் குறைந்து வந்திருக்கின்றார்கள்.