தமிழர்களின் விருந்தோம்பலில் முக்கியமான ஒன்று இனிப்பு வகைகளைப் பரிசளிப்பது. ஒருவர் வீட்டுக்கு செல்லும் போது வெறும் கையோடு செல்லக்கூடாது என கையில் இனிப்பு, காரம் என வீட்டில் உள்ள இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றார் போல தின்பண்டங்களை வாங்கிச் செல்வதை பெரும்பாலானோர் வாடிக்கையாகவே வைத்திருப்பர்.
ஆனால், கரோனா அனைவரையும் வீட்டிலேயே முடக்கியது. மிக முக்கியமாக சுகாதாரத்தின் நிமித்தம் பெரும்பாலானோர் பேக்கரி, இனிப்பு வகைகளை விற்கும் கடைகளை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். ஊரடங்கு ஆரம்ப கட்டத்தில் பேக்கரிகளுக்கு அனுமதியில்லை. ஆனால் அடுத்தடுத்த தளர்வுகளில் இது சாத்தியப்பட்டாலும், வியாபாரமின்றி அதைத் திறந்து வைத்திருப்பது வீண் தானே என மனம் நொந்து கொள்கிறார், வியாபாரி ஒருவர்.
பேக்கரி வைத்திருப்பது அத்தனை சுலபமான காரியமும் அல்ல. பிறந்தநாள் கேக்குகளை வாங்குபவர்கள் முதல் பப்ஸ் வாங்குபவர் வரை அனைத்து வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். காலத்தின் போக்குக்கு ஏற்றார் போல நொறுக்குத்தீனிகளின் வகைகளையும் மேம்படுத்த வேண்டும். அப்பப்பா... பேக்கரி நடத்துபவர்களுக்குத்தான் எத்தனை டாஸ்க். இந்நிலையில், கரோனா ஊரடங்கு வேறு அவர்கள் தலையில் பேரிடியாக விழுந்தது.