விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்தவர் கன்னியம்மாள் (90). இவர் இன்று (ஆக. 10) காலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, ஏழாவது முறையாக வெள்ளை காகிதத்தில் தனது மனுவை எழுதி கொடுத்துவிட்டு, வெகு நேரமாக உட்கார்ந்திருந்தார்.
தனக்கே உண்டான வயோதிகத்தில் மிகவும் மன குமுறுலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கும் நீதி கிடைக்காதா என பரிதாபமாக உட்கார்ந்திருந்தார். இவருக்கு அங்கிருந்த பெண் காவலர்கள் உணவளித்து, அவரது பசியை ஆற்றினர்.
யார் இந்த கன்னியம்மாள்? ஏன் ஏழு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்? என்ன பிரச்னை என்பது குறித்து காணலாம். கன்னியம்மாளின் பெரியம்மா வகையில் வந்த பேரன் சண்முகன் என்பவர், கன்னியம்மாளின் சொத்தை அபகரித்துவிட்டு, கன்னியம்மாளை நடுவீதிக்குத் தள்ளியுள்ளார். வயதான காலத்தில் தன்னால் சண்டையிட முடியாது என்பதற்காக இந்த அரசையும், இந்த நீதிமன்றத்தையும் நாடி வந்திருந்தார், கன்னியம்மாள் பாட்டி.
ஆனால், கன்னியம்மாளின் எண்ணமும், நம்பிக்கையும் பொய்த்துபோனது என்றே கூறலாம். கடந்த பல நாள்களாக ஆட்சியரிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருந்தும் இந்த வயதில், வேகாத வெயிலில் பல முறை ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் அளித்திருக்கிறார். ஆறு முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் தற்போது ஏழாவது முறையாகப் புகார் அளிக்க வந்திந்தார், கன்னியம்மாள்.
புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், எத்துனை முறை அலைக்கலைத்தாலும் தான் மீண்டும் மீண்டும் புகார் அளிக்க வருவேன் என தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். தனது கடைசிக்காலத்தில் வாழ்வதற்காக ஓர் இடம் வேண்டும் என்பதற்காக, பறிகொடுத்த சொத்தை மீட்டுத்தரக்கோரி, இந்த அலுவலகத்திற்கு பல முறை வந்து செல்கிறார். இந்த கன்னியம்மாளின் புகாரை ஏற்று, இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி கன்னியம்மாளிடம் மட்டுமல்ல அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், காவல் துறையினர் உள்பட அனைவருக்கும் எழுந்துள்ளது.
இது குறித்து கன்னியம்மாளிடம் கேட்டபோது, அவரால் பேசுவதற்கான உடல் வலிமை கூட இல்லை. இதனால், அவருடன் வந்தவர் மெல்ல பேச ஆரம்பித்தார். “தனக்கும் கன்னியம்மாளுக்கும் வாரிசுகள் இல்லை. நாங்களாகவே எங்களை பார்த்துக்கொள்கிறோம். இந்நிலையில் கன்னியம்மாளின் பெரியம்மா வகையில் வந்த பேரன் சண்முகன் என்பவர் அவர்களுடைய சொத்துகளை அவருடைய அத்தைகளுக்கு விற்றுவிட்டு, தற்போது தங்களுடைய 2 சென்ட் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்.