இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, மாநிலச் செயலாளர் ரா. முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி. ராஜா, "தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டத்தில் மத்திய, மாநில அளவிலான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதனால், எவ்வித பாதிப்பும் இல்லை என்றால் அது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்க வேண்டும்.
நாட்டில் பிறப்பு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத ஏழைகளே அதிகமாக உள்ளனர். இச்சட்டங்களால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை எதிர்த்து இரண்டு மாதங்களாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
டெல்லி வன்முறை சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவம் கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல் துறையினர் கலவரத்தை வேடிக்கைப் பார்த்தது கண்டனத்துக்குரியது.
இச்சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்றும், வன்முறையைத் தூண்டும்விதமாகவும் பேசிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டெல்லி சம்பவத்துக்குப் புலன் விசாரணை நடத்திட வேண்டும்.