நடிகர் ரஜினிகாந்த் தற்போது அவரது அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளார்.வரும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சமீபத்தில்தெரிவித்தார். அதிலிருந்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக காணப்படுகின்றனர். அதனுடன் மேலும் இரட்டை கொண்டாட்டமாக இன்று(டிச.12) அவரது பிறந்த நாளும் இணைந்து கொண்டது.
தங்களது குடும்பத்தை விடவும் அதிகமாக நேசிக்கும் ஏராளமான ரசிகர்கள் ரஜினிக்கு உண்டு. பல மாவட்டங்களில் ரஜினியின் ரசிகர்கள் அன்னதானம், இலவச பொருள்கள் வழங்குவது உள்ளிட்ட பல உதவிகளை அவரது பிறந்த நாளன்று செய்துவருகின்றனர்.
அப்படிப்பட்ட ரசிகர்களில் ஒருவர்தான் வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் (எ) மாவீரன். ரஜினி பிறந்தநாளான இன்று (டிச. 12) புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காட்பாடி, அரியூர், விருதம்பட்டு, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கீழ் மொனவூர், மேல் மொனவூர், கொணவட்டம், அப்துல்லாபுரம் போன்ற வழிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக ஆட்டோ சவாரி வழங்கினார். மேலும் இன்று(டிச.12) காலை சக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
இவரை நேரில் சந்தித்த போது நமது ஈடிவி பாரத்திடம் அவர் கூறியதாவது, "15 வருடங்களாக வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன்தான். எனக்கு ஐஸ்வர்யா, ரஜினி, படையப்பா என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். மீண்டும் குழந்தை பிறந்தால் அண்ணாத்த அல்லது காலா கரிகாலன் எனதான் பெயர் சூட்டுவேன் என்று ரஜினி ரசிகருக்கே உள்ள வேகத்துடனும், துடிப்புடனும் பேசத் தொடங்கினார் மாவீரன்.