வேலூர் மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுவினர் காகிதக் கவர்கள், காட்டன் துணிப்பைகள், வாழை இலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வது குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு சிறப்பு செய்தி தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் நாம் பேசும்போது, ஆரம்பத்தில் நெகிழிக்கு மாற்றாக காகிதக் கவர்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததாகவும், நாளடைவில் மீண்டும் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பதால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம்சுந்தரத்திடம் கேட்டபோது, ”வேலூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இருப்பினும், அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டுவந்து குடோனில் பதுக்கிவைத்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.