வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் புகழ்பெற்ற கெங்கையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி 1ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உட்பட வெளி மாநிலங்களிலிருந்தும், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த சிரசு திருவிழா, தற்போது, கரோனா பாதிப்பின் காரணமாக ஆகம விதிப்படி, எளிமையாக சிரசு திருவிழாவை நடத்திக்கொள்ள வேலூர் ஆட்சியர் அனுமதியளித்திருந்தார். அதனடிப்படையில், வைகாசி 1ஆம் தேதியான இன்று நள்ளிரவில், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் 10 பேருடன் 2 மணி நேரத்தில் சிரசு திருவிழா நடைபெற்றது.