மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று (டிச.08) பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வகையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை எஸ்ஆர்எம்யூ (தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணிமனை நுழைவுவாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
அப்போது துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் கூறுகையில், “மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாளர் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
ஊட்டி மலை ரயிலை 4.75 லட்சம் ரூபாய்க்கு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 30 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த ரயிலில் பணியாற்றிய டிக்கெட் பரிசோதகர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதேபோல் ரயில் ஓட்டுநர்கள், பராமரிப்புப் பணியாளர்கள், போக்குவரத்து பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், தொழிலாளர்கள் பலர் எதிர்காலத்தில் வேலை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.