சென்னை:இயற்கை வேளாண்மை மற்றும் விவசாயம் குறித்தும், பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள் குறித்தும் திருச்சியில் வரும் 28ஆம் தேதி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்படும் என ஈஷா அறிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், “ஈஷா நிறுவனத்தின் சார்பில் விவசாய இயக்கம் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடன் இணைந்து பல்வேறு கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. ஈஷா விவசாயம் அமைப்பின் சார்பில் 15ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 3ஆயிரம் விவசாயிகள் இயற்கை வேளாண்மை தற்பொழுது செய்து வருகின்றனர்.
திருச்சியில் வரும் 28ஆம் தேதி நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மை வல்லுநர் பாமயன், இயற்கை விவசாயத்தில் அவசியம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து கருத்துகளைத் தெரிவிக்கவுள்ளார்.