திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு எம்பி திருநாவுக்கரசர் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவிக்கும் பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியான 7 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்துக்கொண்டார். நாங்களும் இதை மக்களுக்கு தான் செலவிடுவோம்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு 10 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு 5,000 ரூபாயும் வங்கிகளில் செலுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற கட்டடம் கட்டுவது போன்ற தேவையற்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது. ஆறு மாத காலத்திற்கு தேவையற்ற பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது?, என்ன செலவு செய்யப்பட்டது? என்பது குறித்த விபரங்களை வெளியிட வேண்டும். தற்போதைய கொடுமையான சூழலிலும் லஞ்சம், ஊழல் போன்றவற்றில் ஆளுங்கட்சியினர் கவனம் செலுத்தக் கூடாது. இது மகா பாவத்திற்கு வழிவகுக்கும். எந்த ஜென்மத்திலும் இந்த பாவம் அவர்களை விட்டுப்போகாது. இந்த சமயத்தில் கமிஷன் வாங்கும் அமைச்சர்களும், அரசாங்கமும் உருப்படமாட்டார்கள்.
மறைந்த பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி, வாஜ்பாய் போன்றவர்கள் மக்களின் நினைவில் நிற்கக்கூடிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். ஆனால் மோடி அந்த வகையில் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மோடி நன்றாகப் பேசுகிறார். இதைக்கேட்டு மக்களுக்கு புளித்துப் போய்விட்டது. நன்மை தரும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பொருளாதாரத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.