தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 3, 2020, 3:48 PM IST

ETV Bharat / state

ஓலைக்குடா கழிவுநீர் சுத்திகரிப்பு வழக்கு: தலைமை வனப் பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு!

ராமேஸ்வரம்: ஓலைக்குடா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில், தமிழ்நாடு தலைமை வனப் பாதுகாவலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

mdu
mdu

ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "ஓலைக்குடா பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்களின் பிரதான தொழிலாக மீன்பிடித்தல் இருந்துவருகிறது. கடற்கரையிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவு வரை மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குமேல் இலங்கை கடல் எல்லை தொடங்குகிறது. அதோடு ஓலைக்குடா கடற்கரை பகுதியில் அரியவகை உயிரினங்களும் அதிகளவில் வாழ்ந்துவருகின்றன.

தற்போது ஓலைக்குடா பகுதியில் ராமேஸ்வரம் நகராட்சி சார்பாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுத்திகரிப்பு செய்த நீரை பைப்லைன் மூலம் கடலில் கலப்பதற்கு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சுத்திகரிப்பு நிலையம் கடற்கரையிலிருந்து 90 மீட்டர் தொலைவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் அப்பகுதி மிக அதிக அளவில் பாதிக்கப்படும். மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பிற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட உள்ளது.

தீவுகளில் அருகே ஆழ்துளைக் கிணறு அமைப்பதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும். மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவும், வழக்கு குறித்து தலைமை வனப் பாதுகாவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details