திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வினால் மரணமடைந்த மாணவிகளின் இழப்பிற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்லடம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து காவல் துறையினர் அவ்வழியே வந்த வாகனங்களை நிறுத்திவைத்தனர்.
திருப்பூர் எம்எல்ஏ காவல் துறையினருடன் வாக்குவாதம்!
திருப்பூர்: போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் என்று கூறியும் காவல் துறையினர் தன் வாகனத்தை அனுமதிக்கவில்லை என திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ குணசேகரன் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சர் தலைமையிலான ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அவ்வழியே வந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரனின் காரையும் காவல் துறையினர் தடுத்துள்ளனர். தான் சட்டப்பேரவை உறுப்பினர் எனவும், ஆய்வுக்கூட்டத்திற்கு செல்வதாகக் கூறியும் தன்னை அனுமதிக்கவில்லை என அதிமுக எம்எல்ஏ, காவல் உதவிஆணையாளர் நவீன்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் செய்வதறியாது நின்ற காவல் துறையினர் இதுபோன்று இனி நிகழாதவாறு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வுக்கூட்டத்திற்குச் சென்றார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.