திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணை உள்ளது. இந்த அணையில் இருந்து தண்ணீர் வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டம் கார்வழி அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, அரவக்குறிச்சி தாலூகாவில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் திருப்பூர் பனியன் நிறுவனங்களின் சாயக்கழிவுகள் நொய்யல் ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாமல் திறந்துவிடப்பட்ட நிலையில், அந்த கழிவுநீரினை விவசாயிகள் பாசனத்துக்கு பன்படுத்தியதால் விளைநிலங்கள் பாழ்பட்டுப்போனது. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக சின்னமுத்தூர் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழையினால் நொய்யல் ஆற்றில் மழைநீர் செல்கிறது. இதனைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு பின் சின்னமுதூர் அணையிலிருந்து தண்ணீர் கார்வழி அணைக்கு இரண்டாவது முறையாக வாய்க்கால் மூலம் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பெய்து வரும் மழையால் நொய்யல் வாய்க்காலையொட்டி அமைந்துள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 15 ஆண்டுகளுக்கு பின் நெல் நடவு செய்வதற்கு ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக கால்நடைக்கான சோளம் மட்டுமே பயிரிட்டு வந்த நிலையில், தற்போது விவசாயிகள் நெல் நடவு செய்ய ஆயத்தப் பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:லண்டனைக் கலக்கும் 'பாகுபலி' - தேவசேனாவுடன் பல்வாள்தேவன்