சிறுதானியங்களில் அதிகளவு புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் அதனை அதிகளவில் உண்ண வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
அதே வேளையில் இந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியில் பரப்புரை பயணம் தொடக்கம்
மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக சிறுதானியங்கள் 2020-21ஆம் ஆண்டு திட்ட விளக்க பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பரப்புரை பயணத்தை மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சிறுதானியங்களை பயிரிட விழிப்புணர்வு
கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் ஆகிய நான்கு வட்டாரங்களில் மானாவாரி பயிர்கள் அதிகம் பயிரிடப்படுவதால் அப்பகுதிகளில் கம்பு, குதிரைவாலி, வரகு, பனிவரகு, கேழ்வரகு, தினை, சோளம், சாமை உள்ளிட்ட சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாயிகளிடம் இந்த வேன்கள் மூலமாக விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு கிலோவுக்கு முப்பது ரூபாய்
தூத்துக்குடியில் நடப்பாண்டில் கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் கூடுதலாக உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோவுக்கு முப்பது ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தின்பண்டங்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் குடில் - புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்