தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த லாரியை வடபாகம் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் சுமார் 60 மூட்டைகளில் 2 டன் எடையுள்ள விரலி மஞ்சள் இருந்தது தெரியவந்தது.
இலங்கைக்கு மஞ்சள் கடத்தல்
இதனை தொடர்ந்து அந்த லாரியின் ஓட்டுநர் அன்பு என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மூட்டைகளில் உள்ள விரலி மஞ்சள்களை திரேஸ்புரம் கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட விரலி மஞ்சள்களின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநரிடம் விசாரணை
இந்த கடத்தல் பிண்ணனியில் உள்ள நபர்கள் யார்? எங்கிருந்து மஞ்சள் எடுத்து வரப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்ட அன்புவிடம், காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மஞ்சள் நல்ல விலைக்கு விற்கப்படும் என்ற கணிப்பில் தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு விரலி மஞ்சள் அடிக்கடி கடத்தப்படுகிறது. இதனை தடுப்பதற்காக மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் விரலி மஞ்சள் பறிமுதல்!