கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ். ரெங்கநாயகலு, மாநில பொதுச்செயலாளர் பி. பரமேஸ்வரன் என பலர் திரண்டுவந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இளையரசனேந்தல் பிர்க்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
இதையடுத்து அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், "இளையரசனேந்தல் வருவாய் கிராமங்கள் உள்பட 12 பஞ்சாயத்துகள் கோவில்பட்டியைச் சுற்றி சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இங்குள்ள மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, விளைபொருள்கள், சந்தைப்படுத்தல் என பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு கோவில்பட்டி நகரத்தையே சார்ந்துள்ளனர்.
தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மனு இங்குள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துடன் இளையரசனேந்தல் பிர்க்கா இணைக்கப்பட்டது.
நீதித்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் ஊராட்சி ஒன்றியம் குருவி குளத்திலிருந்து இதுவரை மாற்றப்படவில்லை.
இதனால் நிர்வாக ரீதியாக தூத்துக்குடி மாவட்டமும், ஊராட்சி ரீதியாக தென்காசி மாவட்டமும் இருப்பதால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துவருகின்றனர். அரசு திட்டங்கள் பெறுவதில் கால தாமதமும், அலைக்கழிப்பும் ஏற்படுகிறது.
எனவே இளையரசனேந்தல் பிர்க்காவை சேர்ந்த 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் இளையரசனேந்தல் உரிமை மீட்புக் குழுத் தலைவர் முருகன், ஆடு வளர்ப்போர் சங்கத் தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூதனப் போராட்டம்!