தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த பட்சிராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், "கடற்கரைப் பகுதியில் சிப்பிகளை சேகரித்து அதிலுள்ள மணல் நீக்கி, கடற்கரையிலேயே காளவாசல் அமைத்து, அதனை சுண்ணாம்புகளாக மாற்றி விற்பனை செய்வது வழக்கம். இது பாரம்பரியமான முறையில் பல காலமாக செய்து வரும் சிறுதொழில். இத்தொழிலை வர்த்தக ரீதியாக செய்யும் சிலர், சிப்பிகளை சேகரிக்க, மீன்பிடி இயந்திரப் படகுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
குலசேகரப்பட்டினம் கடற்கரை பகுதியில் 16 இயந்திரப் படகுகள் மூலம் 160 பேர் ஒன்றிணைந்து, கடற்கரையிலிருந்து ஏழு கிலோமீட்டர் கடலின் உள்பகுதிக்குச் சென்று, சிப்பி மணல் மற்றும் தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை எடுத்து வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த வகையில் ஆண்டு ஒன்றுக்கு 40 ஆயிரம் டன் சிற்பி, கடலின் உள்பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. இதனை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதால், கடற்கரை கிராமங்களில் தார்ச்சாலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.