சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் 60 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி பாஜகவிற்கு உள்ளது. திமுக ஆட்சி அமையக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம். எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதலமைச்சர் ஆவார்.
கூட்டணி தர்மத்தின்படி பாஜகவின் நிலைப்பாடு இருக்குமே தவிர 100 சீட்டு கொடுங்கள் 200 சீட்டு கொடுங்கள் என்று கேட்க மாட்டோம். எனவே அதிமுகவை முன்னிறுத்தி பரப்புரை செய்யவுள்ளோம். எத்தனை சீட் பாஜகவிற்கு கொடுத்தாலும் வெற்றிபெறுவோம்.
பாஜகவினர் ரவுடிகள் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வது, சட்டியைப் பார்த்து அடுப்புக்கரி, நீ கறுப்பு என்று கூறுவதுபோல உள்ளது. மக்களுக்கு நன்றாகத் தெரியும், யாருடைய ஆட்சியில் அராஜகம் அதிகமாக இருந்தது என்று. எனவே ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல.
இதேபோல் திமுகவின் ஊழல் பட்டியலை எடுத்தால் அவர்கள் நிலைமை என்னவாகும். ஸ்டாலின் கூறும் பட்டியலில் உள்ள நபர்கள் யாரும் பாஜக பொறுப்பில் இல்லை. லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள பாஜகவில் எட்டு பேரை மட்டும் வைத்துக்கொண்டு ஸ்டாலின் குறை கூறுகிறார்.
மக்கள் சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டும். நிச்சயமாக பெட்ரோல் விலை குறையும். பொதுத் துறை நிறுவனங்கள் சிரமத்தைச் சந்திக்க திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் காரணம்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 காசுகள் குறையும்: தமிழிசை சவுந்தரராஜன்