திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஓண்ணுபுரம் ஊராட்சிக்குட்பட்ட வி.வி.தாங்கல் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு பாதை இல்லாத காரணத்தினால் வேறுவழியின்றி விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் நிலை தொடர்கிறது.
இது சம்மந்தமாக அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரையில் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் அந்தக் கிராமத்தில் இறந்த நபரின் சடலத்தை விவசாயி நிலத்தில் மிதித்து சுமந்து கொண்டு செல்வதால் கால்கள் சேற்றில் சிக்கி பலத்த காயம் ஏற்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு வி.வி.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கமலம்மாள் (80) மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். கமலாம்மாள் சடலத்தை சுமந்து சென்றவர்கள் சேற்றில் விழுந்து படுகாயமடைந்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை17) காலையில் அதேக் கிராமத்தை சேர்ந்த அப்பு(70) உடல் நிலைசரியில்லாமல் இறந்தார். அப்புவின் சடலத்தை விவசாய நிலத்தில் கிராமத்தினர் கொண்டு சென்றனர். இதில் சுமந்து சென்ற ஓருசிலருக்கு காயம் ஏற்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் சுடுகாடு பாதை இருந்துள்ளது. ஆனால் ஓரு சில விவசாயிகள் சுடுகாடு பாதையை ஆக்கிரமிப்பு செய்யபட்டதால் இதுநாள் வரையில் சடலத்தை கொண்டு செல்ல சிரமம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றி சுடுகாடு பாதையை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'விரைவில் சடலம் எடுத்துச்செல்ல வழி ஏற்படுத்தித் தரப்படும்' - வேலூர் மாவட்ட ஆட்சியர் உறுதி