திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் மதுராம்பட்டு கிராமத்தில் தற்போது நடந்து முடிந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் இந்து ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் எனப் போலியாகச் சாதி சான்றிதழ் சமர்ப்பித்து வில்சன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். ஆனால், வில்சன் பிற்படுத்தபட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் போலியாக சாதிச் சான்றிதழ் பெற்று ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக அரசு அலுவலர்களும் செயல்பட்டுள்ளனர் என்று அந்தக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், மனு தாக்கல் செய்தபோது இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றிபெற்ற வில்சனின் வெற்றி செல்லாது என்று அறிவித்து, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.