திருவள்ளூர் - ஆவடி சாலையில் அமைந்துள்ள காக்களூர் தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இச்சாலையோரம் தொழிற்சாலை கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் வீடுகள், தொழிற்பேட்டையில் உற்பத்தியாகும் குப்பைகள் சாலையில் கொட்டப்படுகின்றன. இதன்காரணமாக, ஆவடி சாலையில் துர்நாற்றம் வீசுவதோடு, அந்தச் சாலை வழியாகப் பயணிப்பவர்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
காக்களூர் தொழிற்பேட்டை கழிவுகளை தண்ணீர்குளம் ஏரியில் விடுவதற்கு விவசாயிகளும் கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கழிவுநீர் செல்லும் கால்வாயில் மண்ணைக் கொட்டி நிரப்பி தொழிற்சாலை கழிவுகள் வரவிடாமல் தடுத்துள்ளனர்.
காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை கழிவுகளால் தண்ணீர்குளம் ஏரியில் நீர் மாசடைவதுடன் நிலத்தடி நீரும் கேள்விக்குறியாகயுள்ள நிலையில், தொழிற்பேட்டையில் இருந்துவரும் கழிவுநீர் கால்வாயில் ஓடை மண்ணைக் கொட்டியதால், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவிவருகிறது.