திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் ஊராட்சிக்குள்பட்ட எண் 742 என்ற கீழ்நல்லாத்தூர் கூட்டுறவு நியாயவிலைக் கடைக்கு தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட கடந்த 29ஆம் தேதி 178 மூட்டை இலவச அரிசி வந்துள்ளது.
இந்த இலவச அரிசியை கீழ்நல்லாத்தூர் நியாய விலை கடை விற்பனையாளர் செல்வி என்பவர், நேற்று ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, அரசின் உத்தரவை மீறி நியாயவிலையை கடையை திறந்து 50க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை கள்ளத்தனமாக பில் ஏதும் வழங்காமல் விற்பனை செய்துள்ளார்.
இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ் மற்றும் கிராமத்தினர், பில் அளிக்கப்படாமல் கள்ளத்தனமாக மூட்டை ரூபாய் 500 முதல் 1000 வரை விற்பனை செய்யப்பட்டதையறிந்து தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த நபரும் கூட்டுறவு நியாயவிலை கடை விற்பனையாளர் செல்வி இருவரும் இணைந்து மூன்று மாதங்களுக்கு மேலாக கள்ளத்தனமாக, இலவச அரிசியை விற்று வருவதாகவும் ஏழை மக்கள் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள இந்த சூழ்நிலையில் ஏழைகளின் பசியை போக்க அரசு கொடுக்கும் இலவச அரிசியை விற்கும் இவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கீழ்நல்லாத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் எம் தேவதாஸ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நரேஷ்குமார் கூறுகையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த நபரின் உடந்தையுடன் கிராமத்தில் நியாயவிலைக் கடையில் பணிபுரியும் செல்வி, ஏழைகளின் இலவச அரிசியை விற்பதை அறிந்து அதனை தடுத்து நிறுத்தி உள்ளேன், மேலும் இவர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.