திருவள்ளூர்: தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிகை நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு கிராம சபை கூட்டங்களை நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவுக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அரசின் தடை உத்தரவை மீறி, திமுக சார்பில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்தவரிசையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட ஜமீன்கொரட்டூர் கிராமத்தில், இன்று (அக்.2) 10.50 மணி முதல் 11.20 மணி வரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி ஒன்றிய குழுத் தலைவர் ஜெயக்குமார், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் டி.தேசிங்கு, ஜமீன்கொரட்டூர் ஊராட்சி தலைவர் கந்தபாபு உள்பட 300 பேர் பங்கேற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
எவ்வித முன் அனுமதியின்றியும், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையிலும் ஏராளமானோர் ஒன்றுக்கூடி, கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வகையில் கூட்டத்தினை நடத்தியதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும், கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சகாய அல்போன்சா, வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.