திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பூவளம்பேடு அடுத்த வாணிமல்லி கிராமத்தில் கள்ளக்காதலனுடன் தங்கியிருந்த செகந்தராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா (38) என்ற பெண் 2 மாதங்களுக்கு முன் மாயமானதாக, அவரது சகோதரர் விக்ரம் ஆன்லைன் மூலம் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் புகார் அளித்தார்.
அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு
திருவள்ளூர்: மாதர்பாக்கம் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இப்புகாரை பதிவு செய்த பாதிரிவேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மெல்வின் என்பவரை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். மெல்வின் அளித்த தகவலின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட பிரியங்காவின் அழுகிய சடலத்தைத் தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தலைமறைவான மெல்வின் கூட்டாளிகள் விஜய் ஆனந்த், கேரளாவைச் சேர்ந்த நாயர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில், சடலத்தைப் பார்க்க வந்த கிராம மக்கள் அருகாமையிலுள்ள கிணற்றில் சிறுவர்கள் குளிக்கும் போது மூன்று பைகள் மிதப்பதை கண்டதாக காவல்துறையினரிடம் தகவல்கள் கொடுத்தனர்.
இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், கிணற்றிலிருந்து மிதந்த 3 பைகளை எடுத்து பார்த்தனர். அதில் 11 பாக்கெட்டுகளில் அடைத்த ஹெராயின் வடிவிலான பவுடர்கள், மாத்திரைகள், பாட்டில்களில் அடைத்த ரசாயன பொருட்கள், எடை போடும் மெஷின் இருந்தது.
உடனே இதுகுறித்து போதைத் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போதை தடுப்பு பிரிவு ஆய்வாளர் ராஜா இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் கொலையாளிகளுக்கும் கிணற்றில் வீசப்பட்ட போதைவஸ்துகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.