திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலைக்கு முதல்கட்டமாக நிலத்தை வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தினர் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தனியார் வாகன தொழிற்சாலை, ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு கைமாறியதால், இங்கு பணியாற்றிவந்த 178 பணியாளர்கள் பணி நீக்கம்செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து பணி நீக்கம்செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும், நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. அதனோடு இதுதொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.
நிலம் கொடுத்த மக்கள் தொடர் போராட்டம் நடத்திவந்த நிலையில், இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் உள்பட ஏராளமானோர் தனியார் தொழிற்சாலையில் வாயில் அருகே அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.