திருநெல்வேலி:மணிமுத்தாறு 12ஆவது காவல் பட்டாலியனில் பணிபுரிபவர் கார்த்திகேயன். இந்நிலையில், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பரிசு கூப்பன் விழுந்திருப்பதாகவும் அதற்காக முன் பணம் செலுத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு படத்துடன் மூன்று மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதை நம்பிய கார்த்திகேயன் தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.7 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் பரிசு கூப்பன் வராததால், ஆன்லைன் மோசடி கும்பலிடம் தான் ஏமாற்றது, அறிந்த கார்த்திகேயன் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பின்னர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்கும்படி தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் காவல் அதிகாரியிடமே மர்ம கும்பல் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
நெல்லை சைபர் கிரைம் போலீசார் தலைமையில் தனிப்படை:இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்ததில் நைஜீரியாவைச் சேர்ந்த நபர், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளி மற்றும் வினய்குமார் ஆகியோரின் உதவியுடன் அதிகாரி கார்த்திகேயனிடம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது.
அதாவது நைஜீரிய நபருக்கு இருவரும் போலி முகவரியில் சிம்கார்டு சப்ளை செய்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மேற்கண்ட முரளி மற்றும் வினய் குமார் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.