திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று (பிப்.7) பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் வகையில் அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனத் தலைவரான கண்ணபிரான் நேற்று (பிப்.7) தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்துள்ளார். அப்போதுஅவரை பின்தொடர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல், காவல் நிலையம் முன்பு இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அதேபோல் காவல் நிலையம் அருகில் மற்றொரு பகுதியில் இரண்டு குண்டுகளை வீசிச் சென்றனர்.
ஆளில்லாத இடத்தில் குண்டுகள் விழுந்ததால் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே பிரபல ரவுடியான ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் தான் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கண்ணபிரான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி இன்று கண்ணபிரான் தனது ஆதரவாளர்களுடன் நூதன முறையில் கைகளை கயிறால் கட்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்.