திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுகலை பாடப்பிரிவில் மூன்றாவது பருவ பாடத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய 'வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்' என்ற கட்டுரை இடம் பெற்றிருந்தது. பாஜக மாணவர் அமைப்பினரான ஏபிவிபி அளித்த புகாரின் அடிப்படையில் திடீரென, இந்த கட்டுரையை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு சாராத ஒரு அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவெடுத்து கட்டுரையை நீக்கியிருப்பதாக கடும் கண்டனம் எழுந்தது. அருந்ததி ராய் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் இன்று (நவ.17) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியிடம் மனு அளித்தனர்.
அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சியினர் இருந்தனர்.