திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம் தான் தமிழ்நாடு முழுவதும் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் தான் இந்த கொடூரச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
யார் இந்த பல்வீர் சிங் என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம். அதாவது நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் சரக உதவி கண்காணிப்பாளராக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
பயிற்சிக்குப் பிறகு முதல்முறையாக அவருக்கு நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உதவி கண்காணிப்பாளராக பணி ஒதுக்கப்பட்டது. பொதுவாக இளம் அதிகாரி என்றாலே புது உத்வேகத்தோடு செயல்படுவதைப் பார்க்க முடியும். அதன்படி பல்வீர் சிங் அம்பாசமுத்திரத்தில் பொறுப்பேற்ற உடனே, நெல்லை மாவட்டம் குறித்தும் இங்குள்ள மக்களின் மனநிலை, பழக்க வழக்கங்கள், தொழில் முறைகள் குறித்தும் சக காவல் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
குறிப்பாக தான் பொறுப்பேற்ற அம்பாசமுத்திரம் பகுதிகளில் என்னென்ன குற்றங்கள் வழக்கமாக நடைபெறும் என்பது குறித்து தெரிந்து வைத்துக்கொண்ட பல்வீர் சிங், குற்றச்சம்பவம் நடக்காமல் தெருக்கள் வாரியாக சிசிடிவி கேமராக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளார். அவரது முயற்சியில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதே சமயம் குற்றச்செயலில் ஈடுபட்டு காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்படும் விசாரணை கைதிகளிடம் ஏஎஸ்பி பல்வீர் சிங் தனது வேகத்தைக் காட்ட தொடங்கினார்.
அதாவது, பணம் கொடுக்கல் வாங்கல், கள்ளக்காதல், சிசிடிவி கேமராக்களை உடைத்தல் போன்ற சின்ன சின்ன வழக்குகளுக்காக காவல் நிலையம் அழைத்து வரும் நபர்களிடம் கூட மிக கடுமையாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. குற்றத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இளம் அதிகாரி என்ற முறையில் ஏஎஸ்பி கடுமையாக செயல்பட்டாலும் கூட விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்பதை அவர் மறந்துவிட்டார் என்பதை உணரமுடிகிறது. மேலும் கைதிகளின் பல்லை பிடுங்கி எடுக்கும் அளவுக்கு அவரது நடவடிக்கை கடுமையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஆறு மாதத்தில் இவர் பத்துக்கும் மேற்பட்ட நபர்களின் பல்லை உடைத்ததாக பகீர் புகார் எழுந்தது. கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுபாஷ், அவரது நண்பர்கள் லட்சுமி சங்கர், வெங்கடேஷ், சூர்யா ஆகியோர் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கல்லிடைக்குறிச்சி காவல் துறையினர் கைது செய்யப்பட்டபோது ஏஎஸ்பி பல்வீர், அவர்களின் பல்லை பிடுங்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்ற பலரிடம் ஏஎஸ்பி கடுமையாக நடந்து கொண்டாலும் கூட முதல் முதலில் சுபாஷ், சூர்யா தரப்பினர் தான் இந்த விவகாரத்தை வெளியே கூறினர். விசாரணை என்ற பெயரில் ஏஎஸ்பி கையில் உறை அணிந்து கொண்டு தங்கள் பல்லை கட்டிங் பிளேயரை கொண்டு கொடூரமாக பிடுங்கி எடுத்ததாக சுபாஷ், சூர்யா தரப்பினர் குற்றம் சாட்டினர்.
மேலும் அது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தினர். குறிப்பிட்ட சமுதாய பின்னணி கொண்ட அமைப்பான நேதாஜி சுபாஷ் சேனையின் தலைவர் மகாராஜனிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்துள்ளனர். இதையடுத்து மகாராஜன் இந்த விவகாரத்தை செய்தியாளர்களிடம் பேட்டியாக அளித்தார். மேலும், அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் ஏஎஸ்பியால் பதிக்கப்பட்டதாக கூறப்படும் இசக்கிதுரை செல்லப்பா ரூபன் அந்தோணி மாரியப்பன் மற்றொரு மாரியப்பன் சுபாஷ் உட்பட ஏழு பேர் தங்களின் பல்லையும் ஏஎஸ்பி பல்வீர் சிங் கொடூரமாக உடைத்தார் என்று தெரிவித்தனர்.
உடனே, இச்சம்பவம் மேலும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. குறிப்பாக ஜல்லி கற்களை வாயில் திணித்து கையால் தாக்கி சித்ரவதை செய்ததாக கூறினர். அதேபோல் செல்லப்பா மற்றும் அவர்கள் சகோதரர்கள் இந்த விவரத்தை பேசி அதை வீடியோவாக வெளியிட்டனர். இதையடுத்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இச்சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலமை விசாரணை அதிகாரியாக நியமித்தார். அதன் பெயரில் கடந்த 27ஆம் தேதி முதல் பாதிக்கப்பட்டவர்கள் சார் ஆட்சியரிடம் ஆஜராகி விளக்கமளித்து வந்த வேளையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் மாநில அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநில மனித உரிமைகள் ஆணையமும் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. செல்லப்பா உள்பட ஆறு பேர் சென்னையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.