திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர், பாவநாசம். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், 'என் மகன் முத்து மனோ (27). களக்காடு காவல் துறையினரால் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
திடீரென அவரை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். அங்கு கடந்த ஏப்.22ஆம் தேதி, என் மகன் கொலை செய்யப்பட்டார். சிறைக்குள் வைத்து கொலை செய்திடும் நோக்கத்திலேயே, என் மகனை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றியுள்ளனர்.
இந்தக் கொலை குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி, சிறைத் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அரசுத் தரப்பில் இதேபோன்ற மற்றொரு மனு நிலுவையில் உள்ளது. ஒரே காரணத்திற்காக மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொலையானவரின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும்; இதுவரை பிரேதத்தை வாங்கவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, முறையாக விசாரணை நடந்து வருகிறது' எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள் மனு மீதான விசாரணையை ஜூன் மாதத்திற்குத் தள்ளி வைத்தனர்.