திருநெல்வேலி:முருகன் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று (ஜூலை 06) நடைபெற்றது. இதை திறந்து வைப்பதற்காக மாநகர காவல் துணை ஆணையர் (கிழக்கு) சீனிவாசன் வந்திருந்தார். ஆனால், அவர் திடீரென தனக்கு பதிலாக அங்கிருந்த பெண் காவலரை அழைத்து அவர் கையால் கட்டுப்பாட்டு அறையை திறக்கச் செய்தார்.
தொடர்ந்து இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது தொடர்பாக அப்பகுதியில் துணை ஆணையர் சீனிவாசன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அந்த வழியாக தலைக்கவசம் அணிந்தபடி வந்த வாகன ஓட்டிகளுக்கு துணை ஆணையர் நெல்லையின் முக்கிய அடையாளமான அல்வாவை வழங்கி ஊக்குவித்தார்.
கொளுத்தும் வெயிலில் வியர்த்து விறு விறுத்து சென்ற வாகன ஓட்டிகள் திடீரென அல்வா கிடைத்த மகிழ்ச்சியில் அங்கேயே அதை ருசித்து சென்றனர். மேலும், தொடர்ந்து இதுபோன்று போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும்படி வாகன ஓட்டிகளுக்கு துணை ஆணையர் அறிவுரை வழங்கினார்.
அதேபோல் தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து துணை ஆணையர் சீனிவாசன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், இப்புற காவல் நிலையத்தில் காவலர்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பணிபுரிவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக மைக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நெல்லை மாநகரில் நாள்தோறும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஆயிரத்து 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காவல் துறை குறிப்பிடும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
நெல்லையில் தலைக்கவசம் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு அல்வா வழங்கி காவல் துணை ஆணையர் ஊக்குவித்தார் இதையும் படிங்க:இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு செல்ல முயன்றவர் கைது